திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.117 இரும்பைமாகாளம்
பண் - செவ்வழி
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
1
வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதளுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.
2
வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.
3
நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும்ட மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
4
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.
5
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.
6
பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.
7
நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போ லுரவன் னழகாகவே
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.
8
அட்டகாலன் றனைவல்வி னானவ் வரக்கனமுடி
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.
9
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமான்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
10
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com